நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தீவிரமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்தமழையால் நாட்டின் பல இடங்களில் ஆரம்பக்கட்ட மண்சரிவு அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
‘டித்வா’ புயலின் போது மண் மற்றும் பாறைகள் நகர்ந்திருந்தாலும் இதுவரை மண்சரிவு ஏற்படாத பகுதிகளில், தற்போது பெய்யும் மழையினால் திடீர் மண்சரிவுகள் ஏற்படக்கூடும்.
நாடு முழுவதும் தற்போது 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாய வலயங்களில் வாழ்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளில் 15,000 குடும்பங்கள் உயர் அபாயத்தில் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,000 குடும்பங்களை மீள் குடியேற்றும் திட்டம் நடைமுறையிலுள்ளது. எனினும், ‘தித்வா’ புயலுக்குப் பின்னர் புதிதாக 16,793 குடும்பங்கள் மண்சரிவு அபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை பெய்யும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
மண்சரிவு ஏற்பட்ட அல்லது அபாயம் உள்ள இடங்களை வேடிக்கை பார்க்கச் செல்வதைப் பொதுமக்கள் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
புயலின் தாக்கத்தால், முன்பு பாதுகாப்பானவை எனக் கருதப்பட்ட நிலப்பகுதிகள் கூட தற்போது பலவீனமடைந்து அபாயகரமானதாக மாறியிருக்கலாம்.
சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்பாமல், அரசாங்கம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









