உலக யானைகள் தினம் இன்று (12.08.2026) அனுஷ்டிக்கப்படுகின்றது.
வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மனித – யானை மோதல்கள் உட்பட யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆபிரிக்க மற்றும் ஆசிய யானை இனங்களின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
யானைகள் நமது பாரம்பரியம் – அவற்றின் எதிர்காலம் நமது பொறுப்பாகும் என்பது 2026 ஆம் ஆண்டு உலக யானைகள் தினத்தின் கருப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கட்டமைப்பின் தனித்துவமான அடையாளமாகவும், பல்லுயிர் தன்மையின் ஒரு முக்கிய அங்கமாகவும் விளங்கும் காட்டு யானைகளின் பாதுகாப்பு மற்றும் இருப்பு குறித்து உலகளாவிய ரீதியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் பல வருடங்களாக இடம்பெற்ற முறையற்ற அபிவிருத்திச் செயற்பாடுகள் காரணமாக யானைகளின் நடமாடும் பாதைகள் மற்றும் வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளமையால் பாதகமான சுற்றாடல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போது காட்டு யானைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் சுற்றாடல் நீதி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே தெரிவித்தது…..
இலங்கையில் கடந்த காலங்களில் சுமார் 5,000 யானைகள் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வனஜீவராசிகள் கணக்கெடுப்பின்படி 7,000க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
அந்த எண்ணிக்கை தொடர்பில் எமக்குச் சில சிக்கல்கள் உள்ளன. ஆனால், வருடாந்தம் 400 க்கும் மேற்பட்ட யானைகள் இறப்பதும், அத்துடன் மனித – யானை மோதலில் சுமார் 200 மனித உயிர்கள் பலியாவதும் இலங்கையில் உள்ள ஒரு பிரதான பிரச்சினையாகும்.
இந்த வருடத்தில் இதுவரை 180 யானைகள் உயிரிழந்துள்ளன. அத்துடன் 56 மனித மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
அவற்றுள் சுமார் 75 யானை மரணங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டினால் சுமார் 30 யானைகளும், மின்சாரத் தாக்குதலினால் 23 யானைகளும், வெடிமருந்து (ஹக்கபட்டாஸ்) மூலம் 19 யானைகளும் உயிரிழந்துள்ளன.
இலங்கையின் நிலப்பரப்பில் 40% க்கும் அதிகமான பகுதியில் மனிதர்களும் யானைகளும் இணைந்து வாழ்வதனாலேயே யானைகளின் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என அவர் தெரிவித்தார்.
மனித – யானை மோதல்களுக்குத் தீர்வாக தமது அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









