ஜனாதிபதியின் தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 04.08.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பிரதான திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் பௌதிக மற்றும் நிதியியல் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நீதித்துறை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் நீதிமன்றக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதே நோக்கமாகும் என்றும், அதற்காக நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகம், நீதி அமைச்சுக் கட்டிடம், புதுக்கடை நீதிமன்ற வளாகம், காலி, மாத்தளை, கந்தளாய் உட்பட புதிய நீதிமன்ற வளாகங்களின் நிர்மாணப் பணிகள் குறித்த முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

மேலும், 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் காரணமாக இடையில் நிறுத்தப்பட்ட நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் நிர்மாணிக்கும் திட்டம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் கீழ் 79 மில்லியன் மூலதனச் செலவுகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம், சட்டவரைஞர் திணைக்களத்தின் கீழ் 38 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றமும் இங்கு ஆராயப்பட்டன.

தற்போது முக்கிய பங்கு வகிக்கும் சட்டவரைஞர் திணைக்களத்திற்குத் தேவையான மனித வள அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக அதன் செயல்திறனை அதிகரிப்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன்படி 635 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், அது 701 மில்லியன் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான ஆய்வுகூட வசதிகளை வழங்குவதற்குரிய உபகரணங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் கிடைக்கப்பெறும் எனவும் இங்கு குறிப்பிடப்பட்டதுடன், மாதமொன்றுக்குப் பெற்றுக்கொள்ளப்படும் பகுப்பாய்வு அறிக்கைகளின் அளவை 9,000 வரை அதிகரித்துக் கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தைப் பொருத்தமான இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட பிரிவினருக்குப் பணிப்புரை விடுத்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்குக் கீழ் அதிகூடிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சிறைச்சாலைகள் திணைக்களத்திற்காகும். அதன்படி, 5,627 மில்லியன் மூலதனச் செலவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டிடப் புனரமைப்பு, நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் வாகனங்களைக் கொள்வனவு செய்தல், மென்பொருள் கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், சிறைச்சாலை அதிகாரிகளின் வசதிகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பொறியியல் துறையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்ப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சமூதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கீழ் செயற்படும் திட்டங்களின் நிதியியல் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், பொலிஸ், சுகாதார அமைச்சு மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ஒரே நிறுவனத்தின் கீழ் செயற்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களான மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலகம் மற்றும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், அரசகரும மொழிகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களின் பணிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

கொள்முதல் செயன்முறை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, ஏற்கனவே டிஜிட்டல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்குத் தனித்தனி கொள்முதல் செயன்முறையைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects