மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் (WFP) அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் 03.08.2026 அன்று புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
உலக உணவுத்திட்ட ஒத்துழைப்புக்கான கூட்டாண்மை செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். ரூசாந்தன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆராய்ந்தார்.
இதன்போது வீட்டுத் தோட்ட முறைமையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை போசாக்குத் திட்டத்தின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2026 ஆம் ஆண்டில் உலக உணவுத்திட்டத்தின் ஆதரவுடன் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் செயற்பாடுகளும் மதிப்பீடு செய்யப்பட்டன.
இவ் வருடம் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் 15 வீட்டுத்தோட்ட முறைமையின் ஊடாகவும் 27 கோழி வளர்ப்பு செயற்திட்டத்தினுடாக பாடசாலை போசாக்குத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
இத்திட்டத்தின் ஊடாக மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சத்தான மற்றும் நஞ்சற்ற போசாக்கு உணவைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. நிர்மலராஜ், மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.ஹாதி, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உலக உணவுத்திட்ட மாவட்ட இணைப்பாளர் மரியா இவஞ்சலி, விவசாயத் திணைக்களம் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் தலைவர்கள், பல்வேறு அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










