கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை………
எம்மில் பலரும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாததன் காரணமாக சிறுநீரக பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இவர்களில் சிலருக்கு அடிக்கடி மற்றும் அவசரமாக சிறுநீரை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு இது தொடர்பாக கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு சிறுநீர் கசிவும் ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணம் அளிக்கும் வகையில் தற்போது சாக்ரல் நியூரோமோடுலேஷன் எனும் செயல்முறை சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரை தேக்கி வைத்திருக்கும் சிறுநீர் பையின் செயல்பாட்டில் சமச்சீரற்ற நிலை ஏற்பட்டால்… ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறுநீர் கசிவு பாதிப்பு உண்டாகும். பொதுவாக இத்தகைய பாதிப்புகளுக்கு சிறுநீர்ப்பையில் பிரத்யேக வடிக்குழாயை பொருத்துவது தான் நிவாரண வைத்திய நடைமுறையாக இருக்கிறது. இந்த தருணத்தில் சிறுநீர்ப்பையின் அதீத செயல்பாடு மற்றும் சிறுநீர் தேக்கம் – வெளியேறுவதில் குறைபாடுகள்… என பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இவர்களுக்கு தற்போது சாக்ரல் நியூரோமோடுலேஷன் எனும் நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சாக்ரல் நியூரோமோடுலேஷன் என்பது மென்மையான மின் துடிப்புகளை கொண்டு நரம்புகளை தூண்டி, மூளைக்கும், சாக்ரல் நரம்புகளுக்கும் இடையேயான தகவல் தொடர்பு குறைபாட்டை சீராக்குகிறது. இதன் விளைவாக சிறுநீரை தேக்கி வைத்திருக்கும் சிறுநீர்ப்பையின் செயல்பாடு சீரமைக்கப்படுகிறது. இந்த செயல்முறையின் பக்க விளைவு குறைவு என்பதும் இதன் சிறப்பம்சமாகும். இந்த கருவியை பொருத்திக் கொண்டவர்கள் சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்திய நிபுணர்களின் அறிவுரையையும், பரிந்துரையையும் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
வைத்தியர் பசவ ராஜ்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







