இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் 27.07.2026 அன்று நடைபெற்றது.
இந்திய உதவியின் கீழ் இந்நாட்டில் செயல்படுத்தப்படும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த திட்டங்களின் ஒப்பந்தங்களைப் புதுப்பித்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள், வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய அமைச்சுகளின் கீழ் குறித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேலும், டித்வா அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மற்றும் உதவித் தொகையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
குறித்த திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் தனிப்பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச உட்பட ஜனாதிபதி அலுவலகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் Maitrey Kulkarni, அரசியல் பிரிவின் முதல் செயலாளர் Navya Singla, வர்த்தகப் பிரிவின் முதல் செயலாளர் Saurabh Sabhlok உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







