கடவுச்சொல் (Password) போன்ற வழக்கமான முறைகள் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியாத சூழலில், பயனர்கள் தங்களது அடையாளத்தை முக பாவனை (Facial Biometrics) மூலம் உறுதிசெய்யும் புதிய ‘செல்ஃபி காணொளி’ சரிபார்ப்பு வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலி காணொளிகள் (Deepfakes) மற்றும் ஆள்மாறாட்ட மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த பாதுகாப்பான மீட்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்கள் தொலைபேசி கெமரா மூலம் ஒரு குறுகிய செல்ஃபி காணொளியை பதிவு செய்ய வேண்டும்.
பதிவின் போது, கணினி பல்வேறு கோணங்களில் முகத்தைப் படம்பிடிக்க ஏதுவாகப் பயனர்கள் தலையை சில திசைகளில் அசைக்குமாறு வழிகாட்டப்படுவர்.
பின்னர் கணக்கு முடங்கும் பட்சத்தில், பயனர்கள் மீண்டும் ஒரு செல்ஃபி காணொளியை எடுக்க வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட காணொளியுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே கணக்கை இயக்க அனுமதி வழங்கப்படும்.
இதில் நேரலை சரிபார்ப்பு (Liveness Detection) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், நிழற்படங்களையோ அல்லது போலி காணொளிகளையோ பயன்படுத்தி கணக்கை தவறாகப் பெற முடியாது.
பயனர்களின் அனுமதியுடன் மட்டுமே இந்த காணொளிகள் சேமிக்கப்படும்.
மேலும், இவை என்க்ரிப்ட் (Encrypted) செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுவதோடு, பயனர்கள் விரும்பும் போது தங்களது கூகுள் கணக்கிலிருந்து இந்த காணொளியை எந்தநேரத்திலும் நீக்கிக் கொள்ள முடியும்.
தற்போதுள்ள பாஸ்கீ (Passkeys) மற்றும் ‘டூ-ஃபேக்டர்’ (2FA) பாதுகாப்பு முறைகளுக்கு மாற்றாக இல்லாமல், தொலைபேசி தொலைந்துபோகும் போதோ அல்லது பழுதடையும் போதோ கணக்கை மீட்டெடுப்பதற்கான கூடுதல் பாதுகாப்பாகவே இந்த வசதி செயல்படும் என கூகுள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










